திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும், சுற்றியுள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்குத் துணையாகவும் இருப்பது அமராவதி அணையாகும். ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்த ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் நின்றுபோய் வறண்டு கிடக்கிறது.
குறிப்பாக, கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் தடுப்பணைப் பகுதி முழுவதும் தண்ணீர் இன்றி வெறும் மணல் பரப்பாகக் காட்சியளிப்பதை ட்ரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட கழுகுப் பார்வை காட்சிகள் கவலையுடன் வெளிப்படுத்தியுள்ளன. ஆற்றுப் படுகை முழுவதும் தண்ணீர் இல்லாததால், அப்பகுதி தற்போது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவரும் இடமாக மாறியுள்ளது.
இன்று ஆடிப் பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடத் தயாராகிவரும் நிலையில், அமராவதி ஆற்றில் புனித நீராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்களும், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்குத் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர்.
