தெலுங்கு திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகர் பிஷ் வெங்கட். தனித்துவமான தெலுங்கானா உச்சரிப்பு மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் இப்போது சிறுநீரக கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்கு நிறைய பணம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.
இதனையறிந்த நடிகர் பிரபாஸின் குழுவினர், பிஷ் வெங்கட்டின் குடும்பத்தை தொடர்பு கொண்டு நிதி உதவி வழங்க முன்வந்துள்ளனர். இதனை பிஷ் வெங்கட்டின் மகள் ஸ்ரவந்தி தெரிவித்துள்ளார். நிதியுதவி கிடைத்த போதிலும், சிறுநீரக நன்கொடையாளரை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளதாகவும், குடும்பத்தில் யாருடைய சிறுநீரகமும் பொருத்தமாக இல்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நன்கொடையாளரை கண்டறிய உதவுமாறு ஸ்ரவந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
