ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19ம் தேதி வியாழன் அன்று வெளிவந்த துரந்தர் திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வசூல் ரீதியில் துரந்தர் 2 திரைப்படம் புதிய உச்சத்தை தொடுள்ளது.
அந்தவகையில், இந்தியத் திரைத்துறை வரலாற்றில் இதுவரை காணாத ஒரு பிரம்மாண்ட வெற்றியை ‘துரந்தர்’ திரைப்படம் பதிவு செய்துள்ளது. உலகளவில் ரூ.3000 கோடி வசூலை ஈட்டிய முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. ஒரு திரைப்படம் வசூலில் இமாலய சாதனைகளை எட்ட முடியும் என்பதற்குச் சான்றாக, ‘துரந்தர்’ படத்தின் இரண்டு பாகங்களும் இணைந்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளன. இதன் மூலம் இந்திய சினிமாவின் வர்த்தக எல்லை சர்வதேச அளவில் விரிவடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சாதனையில் மிகவும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களுமே தலா ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளன. படத்தின் முதல் பாகம் ரூ.1,307 கோடியையும், அதைத் தொடர்ந்து வெளியான ‘துரந்தர் – 2’ இரண்டாம் பாகம் ரூ.1,712+ கோடியையும் கடந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இரண்டு பாகங்களுமே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, அடுத்தடுத்து பல சாதனைகளைத் தகர்த்து வருவது இந்தியத் திரை உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னதாக இந்திய சினிமாவில் வசூல் சாதனையில் முன்னிலையில் இருந்த ‘பாகுபலி’ (பாகம் 1 – ரூ650 கோடி, பாகம் 2 – ரூ.1,788 கோடி) மற்றும் ‘புஷ்பா’ (பாகம் 1 – ரூ.350 கோடி, பாகம் 2 – ரூ.1,871 கோடி) ஆகிய படங்களின் ஒட்டுமொத்த சாதனைகளை ‘துரந்தர்’ தற்போது பின்னுக்குத் தள்ளியுள்ளது. வலுவான கதைக்களம் மற்றும் பிரம்மாண்டமான மேக்கிங் காரணமாக, மொழி எல்லைகளைக் கடந்து இப்படம் வசூலில் புதிய வரலாறு படைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்பதால், மற்ற படங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
