விவசாய பம்ப் செட்டுகளுக்கு வழங்கப்படும் 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் 14 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மறுத்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ” ஜூலை 24-ஆம் தேதியிட்ட ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 18 மணி நேர இலவச மின்சாரம் இனிமேல் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் உண்மையல்ல. தமிழக விவசாயிகளுக்கு 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் வழங்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லைநாள்தோறும் 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது” என்று தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், மின் கட்டமைப்பில் எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக மட்டுமே சில மணி நேரங்களுக்கு தற்காலிக மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனை மின் விநியோக நேரக் குறைப்பாக கருதக் கூடாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளிடையே குழப்பம் ஏற்படாத வகையில், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
