நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பொங்களாயி அம்மன் கோயில் திருவிழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. மலையாள தெய்வமான இந்த அம்மனுக்கு ஆடி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் பெண்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆண்கள் மட்டுமே அனைத்து சடங்குகளையும் நிறைவேற்றினர். இந்த அரிய வழிபாட்டு முறை இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆலமரத்தடியில் அமைந்துள்ள இந்த கோயிலில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோயில் பூஜை, கிடா வெட்டு, பொங்கல் சமைத்தல், சமபந்தி விருந்து உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆண்களே முழுமையாகக் கையாண்டனர். கோயில் பொருட்களைக்கூட பெண்கள் தொட அனுமதி இல்லை. கோயில் வளாகத்திலும் பெண்களுக்கு நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கத்துக்கான காரணம் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சோக சம்பவம். கெடமலையில் வசித்த பொங்களாயி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண், அடைமழையில் பிரசவ வலியால் தவித்தபோது யாரும் உதவ வராததால், அரச மரத்தடியில் பிரசவித்தார். இரு ஆண் குழந்தைகள் பிறந்தும் இறந்தன. உதவி கிடைக்காத கோபத்தில், “குழந்தை பாக்கியம் இல்லாமல், பசியால் தவிக்கட்டும்” என சாபமிட்டுவிட்டு மலையேறினார். அதன்பின் கிராமத்தில் குழந்தை பிறப்பு பெருமளவில் குறைந்தது.
பின்னர் கொல்லிமலையிலிருந்து வந்த ஒரு மலைவாழ் பாட்டி மூலம் சாபத்தின் விவரம் தெரியவந்தது. அவரது அறிவுரையின்படி, பொங்களாயியை அம்மனாக வழிபட்டு, ஆண்கள் மட்டும் பூஜை செய்யத் தொடங்கியதும் குழந்தை சத்தம் கேட்கத் தொடங்கியது. அதன்பின் ஆடி திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருமணத் தடைகள் நீங்கி நன்மைகள் பிறக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆண்டு விழா இரவு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. கணபதி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. நள்ளிரவில் ஒரு பெண் ஆடு பலியிடப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த 225 ஆட்டுக்கிடாக்கள் வெட்டப்பட்டன. சுமார் 3,000 கிலோவுக்கும் மேற்பட்ட ஆட்டுக்கறி சமைக்கப்பட்டது. 500 கிலோவுக்கு மேல் அரிசியில் சுடச்சுட பொங்கல் தயாரிக்கப்பட்டது.
நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய சமபந்தி கறிவிருந்து இன்று மதியம் 12.30 மணி வரை நீடித்தது. நாமக்கல் மட்டுமின்றி சேலம், கரூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10,000க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். நீண்ட வரிசையில் நின்று அனைவரும் உற்சாகமாக விருந்துண்டனர். இந்த தனித்துவமான ஆண்கள் மட்டுமேயான வழிபாடு மற்றும் பிரம்மாண்ட விருந்து சுற்றுவட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
