நடிகை சமந்தா ரூத் பிரபுவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ (Maa Inti Bangaaram) திரைப்படம் தெலுங்கு திரையுலகில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக அனுஷ்கா ஷெட்டியின் ‘அருந்ததி’ திரைப்படம் தக்கவைத்திருந்த வசூல் சாதனையை இந்தப் படம் முறியடித்து, பெண் நாயகியை மையமாகக் கொண்ட தெலுங்கு படங்களில் அதிக வசூல் செய்த படமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தாவின் ‘திரலாலா மூவிங் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ஜூன் 19 அன்று வெளியான இப்படம், உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சாக்னில்க் (Sacnilk) அறிக்கையின்படி, இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 83.12 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதன் நிகர வசூல் ரூ. 51.50 கோடி ஆகும். 2009-ல் வெளியான ‘அருந்ததி’ திரைப்படம் வாழ்நாள் வசூலாக ரூ. 70 கோடி ஈட்டியிருந்த சாதனையை, ‘மா இண்டி பங்காரம்’  தற்போது முறியடித்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில், படத்தின் எழுத்தாளரும் இணை தயாரிப்பாளருமான ராஜ் நிடிமோரு, படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார். “முதல்முறையாக ஒரு படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குக் கிடைத்துள்ளது. அதே குழுவுடன் பணியாற்றி, முதல் பாகத்தை விட இருமடங்கு உற்சாகத்துடன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு பாரம்பரியமான குடும்பத்திற்கு மருமகளாக நுழையும் ஒரு பெண், தனது கடந்த கால ரகசியங்களை மறைத்துக்கொண்டு, அந்த குடும்பத்தை எப்படி ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுகிறாள் என்பதே படத்தின் விறுவிறுப்பான கதைக்களம். இப்படத்தில் சமந்தாவுடன் குல்ஷன் தேவையா, திகந்த், ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த், லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமந்தாவின் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படைப்பான இப்படம், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், சமந்தா தனது கர்ப்பகாலத்தைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாகப் படங்களில் இருந்து இடைவேளை எடுத்துள்ளார். குழந்தைப் பேறுக்குப் பிறகு தனது அடுத்தடுத்த படங்களை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version