பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளநிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் 16ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தவெக அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த அமைச்சரவைக் கூட்டம் வரும் 16-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2026-2027-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக
கூறப்படுகிறது. இந்தநிலையில், சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவது மரபாகும். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையின் இறுதி வடிவத்திற்கு முறையான ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் தயாரிப்பு, நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அதில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அரசின் முக்கியத் துறைச் செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
