முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பிற்பகலில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 தொகுதிகளில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் மே 10ஆம் தேதி காலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் தவெகவை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இதன்பின்னர் விழா மேடையிலேயே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குவது, சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப் பொருள் ஒழிக்க சிறப்பு காவல்படை என மூன்று அரசாணைகளில் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து மாலையில் சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையாவுக்கு தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று காலை சட்டப்பேரவையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் பிற்பகலில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் மதிமுக நிறுவனர் வைகோவையும் முதலமைச்சர் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசியல் களத்தில் இதுவரை பதவியேற்ற முதலமைச்சர் எதிர்க்கட்சியின் தலைவர் நேரில் சென்று சந்தித்தது இல்லை எனக் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் நிகழ்வுகளின்போது எதிர்பட்டாலும் ஒருவருக்கொருவர் கண்டுகொள்ளாமல் போகும் போக்கும் நிலவுவதுண்டு.
ஆனால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவில் கொண்டு அண்ணா உருவாக்கிய திமுகவின் தற்போதைய தலைவரான மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் விஜய் இன்று சந்திக்க உள்ளதாகவும், இது தமிழ்நாடு அரசியலில் புதிய முன்னெடுப்பு எனவும் கூறப்படுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியதால், அவர் சட்டமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். இதனால் அவரை சட்டமன்றத்தில் சந்திக்க முடியாததால், முதலமைச்சர் விஜய் நேரில் சென்று சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் முதலமைச்சர் விஜய் மதிமுக நிறுவனர் வைகோவை இன்றும், விசிக தலைவர் திருமாவளவனை நாளையும் சந்திக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
