உலகளாவிய கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2026 ஃபிஃபா உலகக்கோப்பை திருவிழா, மெக்ஸிகோவில் பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சைகளுடன் தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டங்கள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்தாலும், மைதானத்தில் காணப்பட்ட காலி இருக்கைகளும், மெக்ஸிகோ நகர வீதிகளில் வெடித்த வன்முறையும் உலகக்கோப்பையின் முதல் நாளைக் கவலையளிக்கும் விதமாக மாற்றியுள்ளன.
மெக்ஸிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில், மெக்ஸிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
ஆனால், குவாடலஜாரா (Guadalajara) மைதானத்தில் நடந்த தென்கொரியா மற்றும் செக்கியா (Czechia) அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் நிலைமை தலைகீழாக இருந்தது. இப்போட்டியில் தென்கொரியா 2-1 என வெற்றி பெற்றாலும், மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் காலியாகவே காட்சியளித்தன. 45,664 கொள்ளளவு கொண்ட இம்மாநிலத்தில் 44,958 பேர் வந்திருந்ததாக வர்ணனையாளர்கள் கூறினாலும், கேமராக்கள் காலி இருக்கைகளைக் காட்டியது ஃபிஃபாவின் டிக்கெட் விற்பனை முறையின் மீது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
https://x.com/PolymarketSport/status/2065261603008774517?
உலகக்கோப்பை வரலாற்றிலேயே இல்லாத அளவாக, இந்த முறை 50 கோடி டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஃபிஃபா பெருமிதம் கொண்டிருந்தது. ஆனால், யதார்த்தத்தில் ரசிகர்களை ஈர்ப்பதற்காகப் பல போட்டிகளின் டிக்கெட் விலையை ஃபிஃபா குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மறுபுறம், போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே மெக்ஸிகோ சிட்டியின் வீதிகளில் மனித உரிமை மீறல்கள், தொழிலாளர்களின் அவல நிலை மற்றும் மெக்ஸிகோவில் மாயமாகும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்துப் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் பெருந்திரளாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெக்ஸிகோவின் தேசியப் பதிவேட்டின்படி தற்போது 1,34,460 பேர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்களும் வெடித்தன. மைதானத்திற்குள் காலி இருக்கைகள், மைதானத்திற்கு வெளியே மக்கள் போராட்டம் என ஃபிஃபா உலகக்கோப்பையின் முதல் நாள் பெரும் சவால்களுடன் தொடங்கியுள்ளது.
