மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் நிகழ்ச்சியில் பங்கெடுக்காமல் புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எக்ஸ்தளப் பக்கத்தில் அரசுக்கு கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் – அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
