தமிழ்நாடு, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 23-ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், எப்போதும் இல்லாத அளவு 93.2% வாக்குகள் பதிவாகி இருந்தது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு 2வது மற்றும் இறுதிக்கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
2வது கட்ட தேர்தலில் மொத்தம் 3கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 837 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அவர்களுக்காக 41,001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்த மாநில போலீசாருடன் இணைந்து 2,321 கம்பெனி மத்திய போலீஸ் படையும் களம் இறங்கியுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.
