சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிப்பட்ட புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொன்முடியின் பேச்சு மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, கீழமை நீதிமன்ற விசாரணைக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர பாண்டியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உடல்நலக் காரணங்கள் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். மேலும், பொன்முடி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததை கருத்தில் கொண்டு, அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
