ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கம், மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தினர்.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கப் பதக்கமும், மனு பாக்கர் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.
இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே நிதானமாகவும் துல்லியமாகவும் இலக்குகளைச் சுட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த ஈஷா சிங், 40 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற மனு பாக்கர், கடுமையான போட்டிக்கு இடையே ‘ஷூட்–ஆஃப்‘ சுற்றில் வெற்றி பெற்று 28 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் யுயுவே ஜாங் 37 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் மனு பாக்கர் 586-20x புள்ளிகளுடன் முதலிடமும், ஈஷா சிங் 585-18x புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பிடித்து மிக எளிதாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
