யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத வகையில் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இன்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கும் வகையில் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கிறது.

ஆம்… 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 18ஆம் தேதி கூடுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் தவெக உறுப்பினர்கள் 106 பேர் உள்பட  மொத்தம் 145 பேர் சட்டசபைக்கு புதியவர்கள்.

சட்டப்பேரவையில் புதிய எம்.எல்.ஏக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற 2 நாள் பயிற்சி நிகழ்வினை ஜூன் 16ஆம் தேதி கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் பேரவைத் ஜே.சி.டி.பிரபாகர், அவை முன்னவர் செங்கோட்டையன், பேரவை துணைத் தலைவர் எம். ரவிசங்கர், அரசு தலைமை கொறடா ஆர். சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டபோதும், ஐந்துமுக குத்துவிளக்கினை முதலமைச்சர் ஒருவர் மட்டுமே முழுவதுமாக ஏற்றினார். மற்றவர்களுக்கு மெழுகுவர்த்தியை தராதது குறித்து

பேரவைத் தலைவருக்கோ, அவை முன்னவருக்கோ கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல், சட்டப்பேரவை நடத்தும் நிகழ்ச்சியில் தானே மொத்த விளக்கையும் ஏற்றுகிறார் ஆக்டர் விஜய் ப்ரோ என அதிமுக இப்போதே விமர்சிக்கத் தொடங்கி விட்டது.

சட்டப்பேரவைக்குள் செல்வதற்கான பயிற்சியின் தொடக்கத்திலேயே, வாங்க… வாங்க… சட்டசபைக்கு வாங்க… அங்க இன்னும் பார்ப்பீங்க என்பதுபோல் இப்போதே எதிர்க்கட்சிகள், களத்தில் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

சட்டபேரவையில் ஆளுநர் உரையின்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என திமுக எம்.எல்.ஏக்களுக்கு அறிவாலயத்தில் வைத்து பாடமும் நடத்தி விட்டார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்…

முதல் முறையாக சட்டசபைக்குள் நுழையும் தவெகவுக்கு,  ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் நடந்துள்ள பல்வேறு நிகழ்வுகள் அதனை பதம்பார்க்கவே காத்திருக்கின்றன.

சிறுமிகள், இளம்பெண்கள், பெண்கள், மூதாட்டிகள் என 40க்கும் மேற்பட்ட என மகளிர்க்கு நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் குறித்தும்,

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தவெகவினர் நடத்தியுள்ள பாலியல் வன்கொடுமைகள், அத்துமீறல்கள், வசூல் வேட்டைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்விக் கணைகளை கூர் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாதது விஜய் அரசு முன் உள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.  விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியையும் தேர்தல் வாக்குறுதி போல் 5 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளின் முழுக் கடன் தொகையையும் தள்ளுபடி செய்யாமல், சிறு குறு மற்றும் பெரு விவசாயிகளுகு 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது  எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவலாகி உள்ளது

ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸின் ஆதரவைப் பெற்று அதற்கு 2 அமைச்சர் பதவியையும் அளித்துள்ள விஜய் அரசு , மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரசுக்கு எதிராக கர்ஜனை செய்யாததும், உச்சநீதிமன்றத்தை நாடாததும் சட்டப்பேரவையில் நிச்சயம் விவாதத்துக்கு உள்ளாக்கப்படும்.

நீட் தேர்வு, கல்வி நிதி உள்பட பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக அரசு செயல்படவில்லை எனப் பேசிய ஜோசப் விஜய்யின் அரசு இப்போதும், அதே விவகாரங்களில் கோரிக்கையை மட்டும் வைத்திருப்பதும்,

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதும் வழக்கம்போல கடிதம் மட்டுமே எழுதியதும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக திமுக ஆட்சியில் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாகக் கூறி தமிழ்நாடு கடனில் உள்ளது, எந்த புதிய திட்டங்களையும் இப்போதைக்கு செயல்படுத்த முடியாது எனக் கையை விரித்திருப்பது குறித்து புள்ளிவிவரங்களோடு கேள்வி எழுப்ப அறிவாலய எம்.எல்.ஏக்கள்  இப்போதே தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் இத்தனை சவால்களையும் தவெக சட்டப்பேரவையில் சந்திக்க வேண்டியிருக்கிறது.  அவர் தடுத்தாடுவாரா அல்லது தடுமாறுவாரா என்பதை எதிர்நோக்கியிருக்கிறது தமிழ் சமூகம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முயன்றபோது அது நேரலையில் காட்டப்பட்டது… ஜூன் 18ஆம் தேதி முதல் அலுவல் நடைபெறும் நாள் எல்லாம்  இதே போல் முழு நிகழ்வையும் நேரலையில் காட்டுவார்களா என்பதில் தெரிந்துவிடும் சட்டப்பேரையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் தைரியம்.!

எம்.ஆசாத்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version