கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான ஜல்லிக்கற்களை தமிழகத்திலிருந்து தடையின்றி கொண்டு செல்ல அனுமதி வழங்குமாறு, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசு கடந்த ஜூலை 9-ஆம் தேதி வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான ஜல்லிக்கற்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போக்குவரத்துக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் ஜல்லிக்கற்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்று வரும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான தரமான ஜல்லிக்கற்கள் அங்கு போதுமான அளவில் கிடைக்காததால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்தே பெரும்பாலான கட்டுமானப் பொருட்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கட்டுப்பாடுகள் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் முன்னேற்றத்தை பாதித்து, திட்டங்கள் தாமதமடையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் கொள்கையை மதிப்பதாகத் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்குத் தேவையான ஜல்லிக்கற்களை மட்டுமே கொண்டு செல்லும் வகையில் உரிய தளர்வு அல்லது சிறப்பு நடைமுறையை உருவாக்கி அனுமதி வழங்குமாறு முதலமைச்சர் விஜயை கேட்டுக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version