பெண்கள் டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வெற்றியைத் தொடர்ந்து, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளை எதிர்கொண்ட மந்தனா, 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 74 ரன்களைக் குவித்து அசத்தினார். இந்த ஆட்டத்தின் மூலம், தனது டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 600 பவுண்டரிகள் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இதுவரை 168 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மந்தனா, மொத்தம் 604 பவுண்டரிகளை அடித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்) இவ்வளவு பவுண்டரிகளை அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா ‘ஆட்ட நாயகி’ விருது பெற்றார். போட்டிக்குப்பின் பேசிய அவர், “லீட்ஸ் மைதானத்தில் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் விளையாடிய அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது.  நெதர்லாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. அந்த அணியைப் பற்றி எங்களுக்கு அதிகத் தகவல்கள் இல்லாததால், வீடியோக்களைப் பார்த்துத் தயார் செய்தோம்,” என்று தெரிவித்தார்.

தொடர்ச்சியான இரண்டு வெற்றிகளுடன் உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, தனது அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த விறுவிறுப்பான போட்டி வரும் ஜூன் 21-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version