மதுவிலக்கு தொடர்பான முதலமைச்சரின் ஆக்ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க என சிவகாசி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சர் கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சிவகாசியில் முதல் பெண் எம்எல்ஏ என சொல்கிறார்கள், அதைவிட சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்க வேண்டும் அதனை விஜய் அண்ணாகிட்ட கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என கண்களில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டார்.
கடந்த ஐந்து வருடங்களாக எம்.எல்.ஏ அலுவலகம் திறக்கப்படாத நிலையில், சிவகாசி கோர்ட் அருகே எம்எல்ஏ அலுவலகம் திறக்கப் பட்டுள்ளது பொதுமக்கள் 24 மணி நேரம் நேரடியாக வந்து சந்திக்கலாம். அண்ணன் விஜய் வழியில் எங்கள் சேவைகளை செய்து கொண்டே இருப்போம் எனத் தெரிவித்தார்.
மதுவால் உயிரிழப்பவர்களை விட வெடி விபத்தில் உயிரிழப்பவர் களுக்கான நிவாரண நிதி குறைவாக இருப்பது தொடர்பான வினாவுக்கு, இதற்கு முன்னால் ஆட்சியில் இருந்தவர்களிடம் இப்படியெல்லாம் கேட்டீர்களா என எதிர் கேள்வி தொடுத்தவர், நாங்கள் இப்போதுதான் வந்துள்ளோம் அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக, நிபுணர்கள், பட்டாசு ஆலை அதிபர்கள் பொதுமக்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் ஆகியோர் கொண்ட ஆலோசனை கமிட்டி அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
வெற்றிச் சான்றிதழை மறந்து வைக்கவில்லை, அது தன்னிடமே இருந்ததாகவும் அதற்குள் மறதி என செய்தி வெளியிட்டு விட்டதாகவும் கூறிய அமைச்சர் கீர்த்தனா, மதுவிலக்கு தொடர்பான வினாவுக்கு மதுக்கடைகள் அடைப்பு தொடர்பாக விஜய் அண்ணா முதலில் கையெழுத்திட்டுள்ளதாகவும், என்னமாதிரி ஆக்ஷன் இனி எடுக்கப்படும் எனவும் எதிர்ப்பார்ப்பை எகிறவைத்தார்.
