தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் ஆபத்தான கட்டடங்களை இடித்து அகற்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மொத்தம் 337 கட்டடங்கள் முற்றிலும் பாதுகாப்பற்றவை என மாநகராட்சி நிர்வாகத்தால் கண்டறியப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பாதுகாப்பற்றவை எனப் பட்டியலிடப்பட்டவைகளில் 130 கட்டடங்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானவை ஆகும். இதில் மிகவும் மோசமான நிலையில் உள்ள 105 கட்டடங்கள் உடனடியாக இடித்து அகற்றப்பட வேண்டியவையாகக் குறிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் உள்ள 128 தனியார் கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 69 கட்டடங்கள் இடிக்கத்தக்க நிலையில் உள்ளன. அரசின் இதர துறைகளுக்குச் சொந்தமான 79 கட்டடங்களும் பாதுகாப்பற்றவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்றவை என முத்திரையிடப்பட்ட இந்த கட்டடங்களில் இயங்கி வரும் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மழைக்காலம் தொடங்கும் போது இந்தக் கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த பழுதடைந்த கட்டடங்களை இடிக்கும் பணி முழு வீச்சில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
