இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வழங்கினார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (15.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றிவரும் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம், டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார்.
அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் கடந்த 8.6.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார்.

தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் நாட்டுப்பற்று, துணிச்சல், கடமை உணர்வு தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்ப்பதோடு, மற்றும் தியாக இளம் தலைமுறையினரிடையே வீர உணர்வு மனப்பான்மையை வளர்த்திடும் வகையில் அமைந்துள்ளது.
பல்வேறு வீர தீரச் செயல்களுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் விருதுகளைப் பெறுகின்றபோது, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவர்கள் பெற்ற விருதுகளுக்கேற்ப ரொக்கப் பரிசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், உயரிய விருதான “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் த. சரத்குமார், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத்துறை சிறப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் எ. சுந்தரவல்லி, முன்னாள் படைவீரர் நலத்துறை இணை இயக்குநர் மேஜர் எம். சுரேஷ், இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
