தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விடக் குறைவாகப் பெய்யவே அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் இக்கூட்டத்தில் முதலமைச்சரிடம் விளக்கினர்.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், எந்தவொரு பேரிடர் காலத்திலும் பொதுமக்களின் உயிர்ச் சேதத்தைத் தடுப்பதே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகங்களும், அவசர காலச் செயல்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் முழு விழிப்புடன் செயல்பட வேண்டும். மீட்புக் குழுவினர் மற்றும் தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தேவைப்படும் இடங்களில் முகாம்களைத் தூய்மையாகப் பராமரித்து மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், மரம் விழுதல் மற்றும் தேங்கும் மழைநீரை அகற்றும் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். பருவமழைக்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்.
பலவீனமான மின் கம்பங்கள், ஆபத்தான மின்கம்பிகளை உடனே சீரமைக்க வேண்டும். மின்கம்பி அறுந்து விழுந்தால் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் நான்கு மாதங்களில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, நீர்நிலைகளைத் தூர்வாருதல், ஆகாயத்தாமரைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை இப்போதிருந்தே தொடங்கி உரியக் காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
