பழனி கோவில் நிலம் மோசடி விற்பனையில் சதி உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக, தவெக அமைச்சர்கள் யாரைக் காப்பாற்றுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :-
பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்குச் சொந்தமான நிலம் மோசடி பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர்கள் இருவர் முன்னுக்குப் பின் முரணாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலம் கோவிலுக்குச் சொந்தமானது. இந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சார் பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தனியார் வசம் இருந்த இந்த இடம் கடந்த திமுக ஆட்சியில் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைகக்ப்பட்டு பக்தர்கள், பொதுமக்களின் வாகன நிறுத்தமாக இருந்தது.
கோயில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வாகன நிறுத்தும் நிலத்தை தனியார் இருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பினாமி மூலமாக இந்தப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
அறியாமையின் காரணமாக இதனை அதிகாரிகள் பதிவு செய்திருப்பதாக அறநிலையத் துறை அமைச்சர் கூறுகிறார்.
விசாரணைக்கு முன்பே அமைச்சர் தானாக முன்வந்து இதனைச் சொல்வதன் மூலம் குற்றவாளியை காப்பாற்ற அமைச்சர் முற்படுவது தெரிகிறது.
ஜூலை 2ஆம் தேதி இந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3-ஆம் தேதி இந்த இடத்தைப் பத்திரப்பதிவு செய்ய வேறு இருவர் ஆவணங்கள் அளித்ததை, சார் பதிவாளர் ஏற்க மறுத்து நிறுத்தி வைத்ததோடு, விடுமுறையில் சென்று விட்டார்.
தொடர்ந்து 6ஆம் தேதி திங்களன்று பழனி சார்பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் விடுமுறையில் சென்ற நிலையில், பக்கத்து ஊர்களில் உள்ள சார் பதிவாளரை இங்கு வரவழைக்காமல் கொடைக்கானலில் உள்ள சார் பதிவாளரை வரவழைத்ததே அரசின் உள்நோக்கம்தான்.
இதேபோல் நிலத்தை வாங்கியவர்களாகக் கூறப்படும் இருவரும் 15 லட்சம் ரூபாய் அளவுக்கு கூட நிலத்தை வாங்கும் வசதியற்றவர்கள் என நாங்கள் கண்டறிந்துள்ள நிலையில் அவர்கள் எப்படி 2 கோடி ரூபாய் அளவுக்கு நிலத்தை வாங்கினார்கள்?
பழனி நிலவிவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரைக் கைது செய்த டூப் சீப் மினிஸ்டர் தலைமையிலான அரசாங்கம், ஏன் இன்னும் சார் பதிவாளரைக் கைது செய்யவில்லை?
இந்துக்களுக்கு எதிரானதாகச் சித்தரிக்கப்படும் திமுக ஆட்சியில் கோயில் நிலங்களைப் பாதுகாத்தோம். பழனியில் மொட்டை போடுவார்கள், ஆனால் பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி.
இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அமைச்சர்கள் ஏன் அதிகாரிகளைப் பாதுகாக்கிறார்கள்? இதன் விசாரணை ஒழுங்காக நடைபெறாவிட்டால் திமுக நீதிமன்றத்துக்கு செல்லும்…
இவ்வாறு அவர் கூறினார்.
