ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிறைக்கு அழைத்து சென்ற கைதி நள்ளிரவில் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அரிசி பாளையத்தை சேர்ந்த 30 வயதான நரேஷ் குமார் கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..
நேற்று கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அவரை போலீசார் அழைத்து வந்தனர்..
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் நேற்று இரவு அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி மீண்டும் கோவைக்கு அழைத்து சென்றனர்..
கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகே சுள்ளி பாளையம் என்ற இடத்தில் பாதுகாப்பாக வந்த உதவி ஆய்வாளர்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணியன், ஓட்டுநர் பெருமாள், காவலர் ஜெகதீசன், ஆகியோர் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தி உள்ளனர்..
அப்போது காவலர்களை பலமாக கீழே தள்ளிவிட்டு நரேஷ் குமார் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதில் காவலர் ஒருவர் காயமடைந்து பெருந்துறையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காவலர்கள் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் 50- க்கும் மேற்பட்டோர், தப்பி ஓடிய குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
