காவிரி நீர்திறப்பு, மேகதாது அணை, விவசாயிகள் நலன் உள்ளிட்ட விவகாரங்களில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசை முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆடிப்பெருக்கு நாளிலும் காவிரி நீர் தமிழகத்தை அடையாததால் டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 12-ஆம் தேதி கிடைக்க வேண்டிய காவிரி நீர், ஆகஸ்ட் மாதம் தொடங்கிய பின்னரும் வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறக்க மறுக்கும் நிலையில், அதைக் கண்டித்து முதலமைச்சர் விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர், அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைக்கக் கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்கு முன் முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாகவும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல ஆர்வம் காட்டும் அரசு, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த தயங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்துச் சென்று பூஜை செய்ததால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீராது என்றும், நாக்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல் “திரையில் தன்னூத்து விவசாயியாக நடித்தவர் நிஜத்தில் கள்ள மௌனம் காக்கிறார்” என்று முதல்வர் விஜயை ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இறுதியாக, தேர்தல் வாக்குறுதியின்படி முழு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கவும், குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தீவிர நடவடிக்கை எடுக்கவும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், இதற்காக திமுகவின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
