கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மிக பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் ஜூன் 9 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
