ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையும், இலக்கிய வளமும் கொண்ட நம் தமிழ் மொழிக்கு, இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் இன்று (ஜூன் 6).
உலகில் உள்ள மிகச்சில மொழிகளுக்கே உரித்தான இந்த உயரிய அங்கீகாரத்தை தமிழ் மொழி எப்படிப் பெற்றது? இந்த நாளில் என்ன நடந்தது? என்பது குறித்த செய்தித் தொகுப்புதான் இது.
மொழியின் பழமை, கிளைமொழிகளின் தாய்மொழி, பிறமொழிகளை சாராது, இலக்கிய இலக்கண வளம் உள்ளிட்ட 11 கோட்பாடுகள் செம்மொழிக்கான தகுதிகளாக பார்க்கப்படுகின்றன.
இத்தகைய தகுதிகளை கொண்ட தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற குரல் இன்று நேற்று எழுந்ததல்ல. 1887-ஆம் ஆண்டிலேயே பரிதிமாற்கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரியார்) தமிழின் தனித்தன்மைகளை விளக்கி, அதைச் செம்மொழி என முதன்முதலில் பிரகடனப்படுத்தினார். அதன் பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் அறிஞர்களும், மொழியியலாளர்களும் இதற்கான பல்வேறு ஆய்வுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வந்தனர்.
2004-ஆம் ஆண்டு மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தில், அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக மற்றும் தமிழகக் கட்சிகள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் “தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும்” என்ற கொள்கை முடிவு தாள்களோடு அறிவிக்கப்பட்டது.
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு ’செம்மொழி’மாநாட்டை கோவையில் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, 2004-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி, இந்திய உள்துறை அமைச்சகம் தமிழைச் செம்மொழியாக அங்கீகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டது. இந்தியாவிலேயே ஒரு மொழிக்குச் செம்மொழி தகுதி வழங்கப்பட்டது அதுவே முதல்முறையாகும்.
இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளை அனுபவித்து வந்தாலும், இந்தியாவில் அதிகாரபூர்வமாக செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளும் செம்மொழிப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட மத்திய அரசு சில கடுமையான தகுதிகளை வரையறுத்திருந்தது. அதில் தமிழ் மொழி நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தி நின்றது:
ஒரு மொழி செம்மொழியாக தகுதி பெறுவதற்கு அதன் தொன்மை, தனித்தன்மை மற்றும் தொடர்ச்சி ஆகிய மூன்று முக்கியக் கூறுகள் அவசியமாகின்றன. முதற்கண், அம்மொழி 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை பழமையான ஆவணப்படுத்தப்பட்ட இலக்கியப் பதிவுகளையும், மிக நீண்டதொரு வரலாற்றுப் பின்னணியையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், பிற மொழிக்குடும்பங்களின் எந்தவொரு தாக்கமும் இன்றி, அவற்றைச் சாராமல் முற்றிலும் தனித்து இயங்கும் அசாத்திய ஆற்றலும், தனித்துவமான இலக்கண வளமும் பெற்றிருப்பது அதன் தனித்தன்மையை பறைசாற்றுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, நூற்றாண்டுகள் கடந்தாலும் அதன் பண்டைய செவ்விலக்கியங்களுக்கும், இன்றைய நவீன கால மொழி வடிவத்திற்கும் இடையே தெளிவானதொரு கலைத் தொடர்பும் மரபுத் தொடர்ச்சியும் அறுபடாமல் நீடித்திருக்க வேண்டும். இத்தகைய உயரிய தகுதிகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருப்பதாலேயே தமிழ் மொழி உலக அரங்கில் செம்மொழியாக வீற்றிருக்கிறது.
தமிழ் செம்மொழியாக நிறுவப்பட்ட இந்த அரசாணை வெளியான பிறகுதான், மைசூரில் இருந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT) பின்னாளில் சென்னைக்கு மாற்றப்பட்டு, தமிழின் தொன்மையை உலகறியச் செய்யும் ஆய்வுகள் தீவிரமடைந்தன. உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைவதற்கும், தமிழ் அறிஞர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுவதற்கும் இந்த தினமே அடித்தளமாக அமைந்தது.
“தமிழ் என்றென்றும் வாழும் ஒரு உயர்தனிச் செம்மொழி” என்பதை உலக அரங்கில் சட்டப்பூர்வமாக நிலைநிறுத்திய நாளாக ஜூன் 6 தமிழ் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது.
