தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசும் சிபிஐயும் பதிலளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பீபிகுளத்தைச் சேர்ந்த கதிரேசன் தாக்கல் செய்த மனுவில், ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறை நடைமுறைகளை மீறி, சீருடை அணியாத துப்பாக்கிச் சுடும் வீரர்களை பயன்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படுத்தியதாகக் கூறி, அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் ஒரே ஒரு காவல் ஆய்வாளர் பெயர் மட்டுமே குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த ஆட்சேபனை மனு இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அருணா ஜெகதீசன் ஆணையம் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரைத்திருந்த நிலையில், இதுவரை ரூ.30 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும், வழக்கின் விசாரணையும் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “எந்த உத்தரவும் இல்லாமல் ஒரு காவல் ஆய்வாளர் மட்டும் தனிப்பட்ட முறையில் துப்பாக்கியை எடுத்து 16 பேரை சுட்டாரா? இந்த வழக்கு ஏன் இவ்வளவு காலம் தாமதமாகிறது?” எனக் கேள்வி எழுப்பினர்.
அத்துடன், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன, சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகள் என்ன, தனித்த விசாரணை அமைப்பிடம் வழக்கை ஒப்படைக்கும் திட்டம் உள்ளதா, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க அரசு பரிசீலிக்கிறதா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக அரசும் சிபிஐயும் விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
