டாலர் சிட்டி என்ற பெருமையைக் கொண்ட திருப்பூர் மாநகரம் பல்வேறு கலாச்சாரப் பண்பாட்டு மாறுதல்களை அடைந்து வருவது கண்கூடு.
ஏறத்தாழ 10 லட்சம் பேர் வசிக்கும் திருப்பூர் மாநகரில், 4 லட்சம் பேர் என்ற அளவுக்கு வடஇந்தியர்கள் காணப்படுகின்றனர். பீகார், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் இருந்து வந்துள்ளனர். மூன்றரை லட்சம் அளவுக்கு தென்தமிழக பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக மதுரை, நாகர்கோவில், விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிறுகடை உரிமையாளர்களாக மாறி உள்ளனர். எஞ்சியவர்கள் தான் மண்ணின் மைந்தர்கள்.
டாஸ்மாக் கடைகளில் உள்ளூர் மக்கள் அதாவது தமிழர்கள் தான் அதிகளவில் தென்படுகின்றனர். பான்பராக்கிற்கு தடை அமலில் உள்ள காரணத்தால், சமீபகாலமாக வட இந்திய தொழிலாளர்களில் கணிசமானோர், டாஸ்மாக் கடைகளில் திரள்வதை பார்க்க முடிகிறது.
இடதுசாரி சிந்தனை அதிகம் கொண்ட திருப்பூர் மாநகரில் ஓர் எல்லை வரை வடஇந்தியர்கள் ஆதிக்கம் பெருகுவதற்கு கம்யூனிஸ்டுகளும் ஒரு காரணம். 8 மணி நேர வேலை, திங்கட்கிழமைகளில் தவறாமல் விடுப்பு எடுப்பது, வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்வது போன்ற காரணங்களால் தொழிலாளர் பற்றாக்குறை முதலாளிகளுக்கு ஏற்பட, அவர்கள் வடஇந்தியர்களை நாடுகின்றனர்.
வட இந்தியர்களோ காலை தொடங்கி இரவு வரை வேலை செய்கின்றனர். அதுவும் நாள் ஒன்றுக்கு வெறும் 600 ரூபாய் முதல் 700 ரூபாய் கொடுத்தாலே போதுமானது. தமிழர்களுக்கோ குறைந்தபட்ச கூலி 1000 ரூபாய் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் கூலித் தொழிலாளர்களாக வந்த பல வடஇந்தியர்கள் 7, 8 மெஷின்களை போட்டுக் கொண்டு சிறிய அளவில் முதலாளிகளாகவும் மாறி வருகின்றனர். இதேநிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் டாலர் சிட்டி முழுவதும் வட இந்தியர்களின் கைக்குள் செல்வதை தவிர்க்க முடியாது.
இப்பொழுது திருப்பூரின் பிரதான பகுதிகள் மற்றும் புறநகர் – கிராமங்களில் வட இந்தியர்கள் அதிகளவில் நிலங்களை, வீடுகளை வாங்கிக் குவிப்பதை பார்க்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், இப்போதைய நிலைமைக்கு டாலர் சிட்டியை நகர்த்திச் செல்வதே வட இந்தியர்கள் என்றாகிவிட்டது. ஆடைகள், உணவுகள், பண்டிகைகள் என்று இப்போது திருப்பூரில் வட இந்தியாவின் சாயல் கவிவதை காண முடிகிறது.
பொருளாதாரத்தில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்தை நோக்கி நகர்ந்தாலும், அதன் நிகர லாபம் மாநிலத்திற்குள்ளாக தங்குவதில்லை என்பதே உண்மை. எப்படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் நிலைபெற்றாலும், அவர்களது வருமானத்தின் பெரும்பகுதி தாய் மண்ணில் தஞ்சமடைவதைப் போல டாலர் சிட்டியில் புழங்கும் வருமானத்தின் முக்கியப் பகுதி வட இந்தியாவை நோக்கி செல்வதை தவிர்க்க முடியவில்லை.
முத்தாய்ப்பாக சில புள்ளிகளை சொல்வதென்றால், அதிகரித்துவிட்ட மதுப்பழக்கம், வேலைக்கு கூடுதல் ஊதியம் போன்றவை நம்மின் வாய்ப்புகளை தாரை வார்க்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரின் இதயப் பகுதியான ராயபுரம், காதர்பேட்டை போன்ற இடங்களில் நைஜீரியர்களின் ஆதிக்கம் இருந்தது. இப்போது அவர்களை வடஇந்தியர்கள் Replace செய்துவிட்டார்கள். ஆனால், வடஇந்தியர்களை Replace செய்ய வேறொரு மாநிலத்தில் இருந்து யாரேனும் வருவார்கள் என்று காத்துக் கொண்டிருக்க முடியாது. நாம் தான் அதனை செய்தாக வேண்டும்.
அரசியல் களங்கள் மாறலாம். ஆட்சியும், கட்சியும் மாறலாம். ஆனால் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் எல்லாவற்றையும் விடப் பெரிது.
