தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அல்லது விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை முதலமைச்சராக்குவதற்கான மாற்று வழிகளை திமுக ஆராய்ந்ததாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திமுகவிடம் முன்கூட்டியே எச்சரிக்கை
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கொளத்தூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ஐயுஎம்எல் மகளிர் அணியினர், குறிப்பாக பெண் வாக்காளர்களிடையே அரசியல் மாற்றத்திற்கான பலத்த அலை வீசுவதை கவனித்து அதனை திமுக தலைமையிலான கூட்டணித் தலைவர்களிடம் முன்கூட்டியே எச்சரித்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தகவலை திமுகவிடம் பகிர்ந்துகொண்ட போதிலும் அவர்கள் என்ன மாதிரியான தொடர் நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றார்.
தவெகவுக்கு ஆதரவு ஏன்?
தவெக தலைவர் விஜய் இந்த அளவிற்குப் பெருவாரியான ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் நிலைக்கு உயருவார் என்பதை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது கூட்டணிக் தலைவர்களோ எதிர்பார்க்கவில்லை என்றும், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, அதன் மூலம் பாஜகவின் மறைமுக ஆதிக்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே புதிய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.
திமுக முன் வைத்த மாற்று வழி
இந்தச் சூழலில், மாறிவரும் அரசியல் நிலவரங்கள் குறித்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் ஐயுஎம்எல் தலைவர்கள் ஆலோசனை நடத்தியபோது, எடப்பாடி கே. பழனிசாமியை முதலமைச்சராக ஆதரிக்கலாம் என்ற ஆலோசனை திமுக தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டதாக காதர் மொகிதீன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து, விசிக தலைவர் தொல். திருமாவளவனை முதலமைச்சராக்கி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவரைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வைக்கும் மற்றொரு மாற்றுத் திட்டமும் திமுக தரப்பால் விவாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்த இரண்டு முன்மொழிவுகளிலுமே தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், மக்களின் ஆதரவைப் பெற்ற விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதே ஜனநாயக முறைப்படி சரியாக இருக்கும் என்பதில் தாங்கள் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தவெக தலைவர்களும் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரி தங்களை அணுகிய நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூகத் தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகே விஜய்யின் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க ஐயுஎம்எல் முடிவு செய்ததாகவும், ஆரம்பத்தில் தங்களுக்கு அமைச்சர் பதவி கோரும் எண்ணம் இல்லாத போதிலும் பின்னர் தேசிய தலைமையின் அறிவுறுத்தலின்படி அமைச்சரவையில் பங்கேற்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், திமுகவின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களைத் தற்போதைய புதிய அரசும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும், மொழி மற்றும் சமூக நீதிக்கான தமிழகத்தின் மரபுகளை நிலைநிறுத்த வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட காதர் மொகிதீன், இபிஎஸ் மற்றும் திருமாவளவன் பெயர்களை ஸ்டாலினே நேரடியாகப் பரிந்துரைத்தாரா என்ற கேள்விக்கு, அந்த ஆலோசனைகள் திமுக தரப்பில் இருந்து வந்தன என்பதை மட்டும் திட்டவட்டமாகப் பதிவு செய்தார்.
