வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் நிர்வாகப் பொறுப்பில் உள்ள இரண்டு நிறுவனங்களில், கடந்த 2018ஆம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்த ஆவணங்களை, 2013-14 முதல் 2015-16 வரையிலான மூன்று நிதியாண்டுகளில் கே.என்.நேரு தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளுடன் அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது, அந்தக் காலக்கட்டத்தில் 17 கோடி ரூபாய் வருமானமும், 11 கோடி ரூபாய் முதலீடும் முறையாகக் கணக்கில் காட்டப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. இதைக் கணக்கில் சேர்த்து மதிப்பீடு செய்யுமாறு கடந்த 2019ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டை வருமான வரித்துறை ஆணையர் ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கணக்கில் காட்டப்படாததாகக் கூறப்பட்ட தொகைக்கும் அந்த நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வருமான வரித்துறையின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, இந்த மனு குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.
