17-வது சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்றது. தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நடைபெற்றது.
பதவிப் பிரமாண வாக்குறுதி அளித்து ஒவ்வொரு எம்.எல்.ஏவும், பதவியேற்றுக் கொண்டு, அதற்குரிய ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

முதலாவதாக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக ஜோசப் விஜய் எனும் நான் எனத் தொடங்கி உளமாற உறுதி கூறினார். அப்போது தவெக எம்.எல்.ஏக்கள் கையைத் தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர்களாக பொறுப்பேற்ற புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜா, கே.ஏ.செங்கோட்டையன், ராஜ்மோகன் உள்பட 9 பேரும் அடுத்தடுத்து அழைக்கப்பட்டனர். இவர்களில் எம்.எல்.ஏ கீர்த்தனா தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வராததால், அவர் பதவியேற்க முடியவில்லை. பின்னர் சான்றிதழை அளித்துவிட்டு பதவியேற்கும்படி சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டபோது திமுகவினர் கரவொலி எழுப்பினர்.
அவருக்குப் பின்னர் முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அடுத்தடுத்து பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராகப் பதவியேற்றனர்
