நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு நேற்று விஜய் ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கியிருந்தார்.
வெள்ளிக் கிழமை வரை விஜய்க்கு பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இன்று விஜய் பதவியேற்பதாக இருந்த நிலையில், தமிழக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக- திமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக பலதரப்பட கருத்துகள் உலா வந்தன. இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார்,
”விஜய் கேட்டுக் கொண்டதால் காவல்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. தனக்கு எவ்வித பாதுகாப்பும் வேண்டாம் என விஜய் சொல்லிவிட்டார். தேவைப்படும் போது விஜய்யே காவல்துறையை அழைப்பார். விஜய் வரும்போதெல்லாம் பொதுமக்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர். பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதால், இந்த நடவடிக்கையை விஜய் எடுத்துள்ளார்” என்றார்.
