தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசினார் முதலமைச்சர் விஜய்.
அப்போது அவர், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததை கிண்டலடிக்கும் விதமான செய்கை ஒன்றை நடித்துக் காண்பித்தார். மேலும் குட்டிக்கதை ஒன்றையும் கூறியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் விஜய்யை கடுமையாக சாடினார்.
”ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதலமைச்சர் விஜய் ஒரு முதலமைச்சர் பொறுப்பிற்கான தகுதியுடன் நடந்து கொள்ளவில்லை. முதலமைச்சர் தேர்தல் mode இல் இருந்து இன்னும் CM Mode-க்கு மாறாமல் இருக்கிறார். சட்டமன்றத்தை ஷூட்டிங் போல நினைக்கிறார்…
பெண்கள் மீதான வன்முறை, சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் ஆகியவை குறித்து இதுவரை திமுக போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. ஆனால் பொது மக்கள் போராடி வருகிறார்கள். இவை எவற்றிற்கும் பதிலளிக்கவில்லை.
திசை திருப்புவதற்காக திமுக மீது தாக்குதல் நடத்தவும் குட்டிக்கதை சொல்கிறார்.முதலமைச்சராக நடந்து கொள்ளும் நடைமுறைகளை விட்டுவிட்டு இன்னும் நடிகராகவே தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார் என்பது வருத்தத்திற்கு உரியது. திரைப்படத்திற்கு கருப்பு பணத்தில் சம்பளம் வாங்கியதாக முதலமைச்சர் மீது புகார் உள்ளது. உங்கள் போக்கை நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் உங்கள் சினிமா பாடலை போட்டு டான்ஸ் ஆடுகிறார். அவரிடம் போய் சொல்லுங்கள். உங்களுக்கும், வி. எஸ் பாபுவுக்கும் என்ன வித்தியாசம். வி.எஸ் பாபு கேட்டகிரிதான் நீங்களும். மற்றவர்கள் கேலி செய்வதை, கிண்டல் செய்வதை, உடல் மொழியில் தெரிவிப்பதை திரைப்பட நடிகராக இருக்கும் போது பேசியதை முதலமைச்சராக செய்வது சரியல்ல. லஞ்ச லாவண்யமாக போன பணத்தை கஜானாவில் நிரப்புகின்றோம் என்று சொல்வது சினிமா வசனம்.
அர்ஜுன் அப்பா குறித்து முதலமைச்சர் குட்டி கதை சொல்கிறார். அப்பாவிடம் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்று உங்கள் அப்பாவே பேட்டி கொடுத்துள்ளார். என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று முதலமைச்சர் அப்பா கூறினார்.
காருக்கு முதலமைச்சர் வரி கட்டியது தொடர்பாக வழக்கு உள்ளது. திரைத்துறையில் முதலமைச்சர் பணத்தை வெள்ளையாக வாங்கினாரா ? அல்லு அர்ஜூன் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசு வழக்கு போட்டது போல கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டு இருந்தால் கேரியர் உச்சம் எல்லாம் கழன்று இருக்கும். திமுக ஆட்சியில் முதலமைச்சர் கருணையோடு இருந்ததால்தான் நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என சிவசங்கர் காட்டமாக தெரிவித்தார்.
