கடந்த ஆண்டு பகல்காமில் நடந்த அந்த கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. ஆனால், லெப்டினன்ட் வினய் நர்வாலின் குடும்பத்திற்கு மட்டும் காலம் அப்படியே உறைந்து நிற்கிறது. கனவுகள் பல சுமந்து, நாட்டுக்காகச் சேவையாற்றத் துடித்த ஒரு இளம் கடற்படை அதிகாரி, தனது தேனிலவின் போது காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட அந்தத் துயரம் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது.
கடந்த 2025 ஏப்ரல் 22-ம் தேதி, தனது 26-வது வயதில் வினய் நர்வால் வீரமரணமடைந்தார். ஏப்ரல் 16-ம் தேதி தான் அவருக்குத் திருமணம் நடந்திருந்தது. திருமண வரவேற்பு முடிந்த மூன்றே நாட்களில், புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியவர், பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார். அந்தச் செய்தியைக் கேட்ட அன்றே எங்கள் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. இப்போது ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவ்வளவுதான்” என அவரது தந்தை ராஜேஷ் நர்வால் வேதனையுடன் கூறுகிறார்.
வினய் நர்வால் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தனது இலட்சியங்கள் மற்றும் குடும்பத்திற்கான ஆசைகளை எழுதி வைத்திருந்ததாக அவரது தந்தை நினைவு கூர்கிறார். “சிறு வயதிலேயே அதிகாரி ஆக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் வெறும் மகன் மட்டுமல்ல, எங்களுக்கு ஒரு தேவதூதன் போல இருந்தார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ராஜேஷ். சிறு வயதில் வினய் தன் விரலைப் பிடித்து நடந்த முதல் நடையை எண்ணிப் பார்க்கும்போது, அந்தத் தந்தையின் கண்கள் கலங்குகின்றன.
வான்படையில் சேர விரும்பி, பின்னர் கடற்படையில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற வினய், ராணுவப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். நாட்டுக்காகச் சேவையாற்றுவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார். தற்போது அவரது மனைவி இமான்ஷி, சகோதரி மற்றும் தாத்தா-பாட்டி என அனைவரும் அந்தப் பெரிய இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இந்தச் சோகத்திலும் அவர்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.
