சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போலி வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முறைகேடுகளை மேற்கொள்ள முயற்சிகள் நடப்பதாகவும், அதனைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்செல்வம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு புகார் அளித்துள்ளார்.
ஆள்மாறாட்டம் செய்தும், மோசடியான முறையில் வாக்களிக்கும் நோக்கத்துடனும், முகத்தை மறைக்கும் ஆடைகள் உள்ளிட்ட மதச்சார்புடைய உடைகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் எனவும் செல்வம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் நடத்தை விதிகளை மீறும் வகையில் வாக்காளர்களைப் பாதிக்கும் நோக்கில் வீட்டு உபயோகப் பொருட்கள், ரொக்கப் பணம் மற்றும் மின்னணுப் பணப் பரிமாற்றங்கள் வாயிலாகப் பரிசுகள் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களையும், தேர்தல் பணியாளர்களையும் மிரட்டும் வகையிலும், தேர்தல் செயல்முறையைச் சீராக நடைபெறவிடாமல் தடுக்கும் வகையிலும் குழப்பங்களை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்னும் அச்சம் நிலவுவதாகவும் கூறியுள்ளார்.
தேர்தல் செயல்முறையின் நேர்மையைக் காத்திடவும், எந்தவொரு வாக்காளரும் வாக்களிப்பதற்கான தங்களின் சட்டபூர்வ உரிமையை இழக்காதிருப்பதை உறுதி செய்யவும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் புகார் மனுவில் கூறியுள்ளார்.
