பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் தாலுகாவைச் சேர்ந்த வெள்ளகெவி கிராமம், அடர்ந்த வனப் பகுதிகளின் நடுவே அமைந்துள்ளது.
இக்கிராமத்திற்கு கொடைக்கானல் நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரமுள்ள வட்டக்கானல் பகுதி வரை வாகனம் மூலம் சென்று, பின்னர் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
குறிப்பாக இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத நிலையில் அங்கு உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அங்கேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது,
இந்த மலைக்கிராமத்தில் சுமார் 250(ஆண்-136,பெண்-116) க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், இதனிடையே நாளை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த வாக்குசாவடிக்கு கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து இன்று வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் கொண்டு செல்லப் பட்டது.
இதற்காக 4 வாக்குச் சாவடி அலுவலர்கள்,துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் உபகரணங்களை கொண்டு சென்றனர்.
நாளை வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வெள்ளகெவி கிராமத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை கும்பக்கரை அருவி வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் குதிரை மூலம் கொண்டு சென்று, பின்னர் அங்கிருந்து திண்டுக்கல்லில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக வாக்குச் சாவடி அதிகாரிகள் தெரிவித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
