ஒடிசாவின் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்ட விழா இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேரோட்டத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பூரியின் கிராண்ட் ரோட்டில் திரண்டிருந்தனர். இந்தத் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் மற்றும் இடநெருக்கடியால் பக்தர்கள் மூச்சுத் திணறலுக்கும், நெரிசலில் சிக்கியும் பாதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில், கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த அனில் டாஷ் (வயது 55) என்ற பக்தர் உயிரிழந்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிப் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, பூரி மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவ மையங்களுக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், தேரோட்டப் பாதையில் பக்தர்களின் நடமாட்டத்தைச் சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விழாவில் திரண்டிருந்த பக்தர்களுக்குத் தேவையான அவசரக்கால மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
