மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவிற்கு சொந்தமான ரு.40கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியை சேர்ந்தவர் சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன். இவர் மதமாற்றம் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செயப்பட்டார். தர்கா முன்பு வளையல் மற்றும் தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற செயல்களுக்காக ரூ.500கோடி வரை வெளிநாடுகளில் பணத்தை பெற்று வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக இரு மாநிலங்களில் 14 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். உத்தரபிரதேசத்தில் 12 இடங்களிலும், மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பந்த்ரா, மஹிம் ஆகிய இரு இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் சங்கூர் பாபாவுக்கு சொந்தமான மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் இருந்த ரூ.40கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. பாபா மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.