மும்பை பைதோனி பகுதியில் தர்பூசணி சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், தற்போது ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த அப்துல்லா (40), அவரது மனைவி நசீம் (35) மற்றும் அவர்களது இரு மகள்கள் தர்பூசணி மற்றும் பிரியாணி சாப்பிட்ட பிறகு வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியதுடன், தர்பூசணி விற்பனையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
முதற்கட்டமாக இது தர்பூசணி அல்லது பிரியாணி சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு நச்சு (Food Poisoning) என்று கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடலில் ‘மார்ஃபின்’ (Morphine) என்ற சக்திவாய்ந்த போதை மற்றும் வலி நிவாரணி மருந்தின் தடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் தீவிர அறுவை சிகிச்சை மற்றும் கடும் வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த மார்ஃபின், எப்படி அந்த குடும்பத்தினரின் உடலுக்குள் சென்றது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் இதயம், மூளை மற்றும் குடல் உள்ளிட்ட உள் உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது; இது சாதாரண உணவு நச்சினால் ஏற்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தர்பூசணியில் எந்தவித நச்சுத்தன்மையும் இல்லை என உணவுப் பாதுகாப்புத் துறை (FDA) ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில், இது தற்செயலான மரணமா அல்லது திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
