மேற்கு வங்க மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்து, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாரதிய ஜனதா கட்சி முதல்முறையாக வங்காளத்தில் அரியணை ஏறியுள்ளது. மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி, மக்களின் மாற்றத்திற்கான வேட்கையை உறுதிப்படுத்தின.
கடந்த தேர்தலில் வெறும் 77 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, இந்த முறை அசுர வளர்ச்சி கண்டு 207 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மம்தா பானர்ஜி 4-வது முறையாகப் பதவியேற்கும் கனவைத் தகர்த்து, பாஜகவின் இந்த வெற்றி இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வங்காளத்தில் தாமரை மலர்ந்துள்ளதைத் தொடர்ந்து, தேசிய அளவில் பாஜகவின் செல்வாக்கு மேலும் வலுவடைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உலக நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் கூறுகையில், “இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பெற்றுள்ள இந்த தீர்க்கமான மற்றும் வரலாற்று வெற்றிக்காக அதிபர் டிரம்ப் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்” என்று தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
