உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், வரும் காலங்களில் திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிரடி விதிமுறை மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் நடிப்பு ஆகியவற்றில் AI-ன் பங்களிப்பு இருக்கக்கூடாது என்றும், இந்தத் துறைகளில் மனித உழைப்பும் திறமையும் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் மனிதர்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரு நடிகர் ஒரே பிரிவில் வெவ்வேறு திரைப்படங்களுக்காகப் பரிந்துரைக்கப்படலாம் என்ற புதிய மாற்றமும், கேன்ஸ் மற்றும் வெனிஸ் போன்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் முதன்மை விருதுகளை வென்ற திரைப்படங்கள் நேரடியாக ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் என்ற அறிவிப்பும் திரைத்துறையினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சர்வதேசத் திரைப்படப் பிரிவிலும் (International Feature Film) முக்கியமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது; அதன்படி, ஒரு நாட்டிலிருந்து இனி ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்தப் பிரிவில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு மொழிகளில் சிறந்த படங்களைத் தயாரிக்கும் நாடுகளுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பவும், அதே சமயம் கலையின் ஆன்மாவாக இருக்கும் மனிதத் திறனைப் போற்றும் வகையிலும் இந்த புதிய விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 99-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாக்கள் விழாவில் மேற்கொள்ளப்படும் எனவும் அகாடமி அறிவித்துள்ளது.
