இன்றைய இளைய தலைமுறையினருக்கு பேரறிஞர் அண்ணா என்பவர் யார்? அவர் நடத்திக் காட்டிய சாதனைகள் என்ன? அவர் கற்றுத் தந்த கொள்கைகள் என்ன? போன்றவற்றை கொண்டு சேர்க்கும் வகையில் அண்ணா வழி திராவிடம் என்ற இதழ் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு..

மனித குலத்தின் மாபெரும் மற்றும் மிக முக்கியமான விழுமியங்களில் ஒன்று, பன்மைத்துவத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த மனித குலத்திற்கான முன்னேற்றத்தை அடையமுடியும் என்பது தான்!

அதே வேளையில் ஒவ்வொரு இனத்திற்கும் உரியதான தனித்துவமான அடையாளங்களை விட்டுவிடாமல் பேணிகாத்திடவும் விரும்புகிறது மனித இனம்.

இவ்விரண்டிற்குமான இடையிலான அரசியலைத் தான் அறிஞர் அண்ணா நமக்காக சிந்தித்து தத்துவமாக்கிச் சென்றிருக்கிறார்.

அண்ணா முன்னிறுத்திய திராவிடம் ஆரியத்திற்கு மாற்றானது , எதிரானது என்பது வெளிப்படையான உண்மையாக இருப்பினும், “பிறப்பால் ஆரியத்தைச் சேர்ந்த ஒருவர், உணர்வால் திராவிடர் ஆகலாம். ஆரியம் பிறப்பில் இல்லை அது கருத்தில் உள்ளது . திராவிடராய்ப் பிறந்து சாதியத்தை நெஞ்சில் சுமப்போரும் ஆரியரே” என்கின்ற அவருடைய விரிவும் தெளிவும் அவரை சர்வதேசியவாதியாக்குகிறது.

எனவே தான் அவரால், “நாடு என்பது பூகோளப்படம் அல்ல, அங்கு வசிக்கும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு” என்று சொல்ல முடிந்தது!

சமத்துவம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவது அல்ல , எல்லோர்க்கும் “சமவாய்ப்பு” அளிப்பது என்பது தான் இன்றும் அண்ணா வழி திராவிடமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

எம்ஜிஆர் கூறியது போல், அரசியல் உலகில் அண்ணா நமக்கு அறிவூட்டும் கடவுள்” என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் அது அண்ணா சுட்டிக்காட்டிய வழியில் நடந்து செல்வது, அண்ணாவின் குறிக்கோள்களுக்குச் செயல்வடிவம் தருவது, நிறைவேற்றப்படாத அண்ணாவின் திட்டங்களை நிறைவேற்றுவது என்பது தான் எனது குறிக்கோள் என்று கூறிச்சென்றார்.

எனவே அண்ணா வழி திராவிடம் என்பது தமிழ் மக்களின் அரசியல்!

தமிழினம் தன்னைத் தானே ஆண்டுகொள்ளும் கலையினை பழக்கிய ஒரு தலைவனின் வழி….

அண்ணாவை, அவருடைய முக்கியத்துவத்தை, அவர் கண்ட திராவிட வழியை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் விதமாக “அண்ணா வழி திராவிடம்” என்கின்ற இந்த இதழ் துவங்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version