பொதுச் செயலாளர் தவிர்த்து அதிமுகவில் இருந்து யார் வந்தாலும் தவெகவில் சேர்த்துக் கொள்வோம் என ஆதவ் அர்ஜுனா பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

சென்னை பனையூரில் செய்தியாளர்களிடம் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வலைப்பக்கத்தில் தவெக குதிரைபேரம் நடந்ததாகக் கூறியுள்ளார்.

2026இல் திமுக தோற்றதில் இருந்து, குறிப்பாக கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றதில் இருந்து, ஏன் தோற்றம் என்பதுகூட தெரியாமல் மு.க.ஸ்டாலினும் உதயநிதியும் பொறாமையுடனும், தூக்கமின்மையுடனும் மக்கள் மத்தியில் தவெக குறித்து பொய்யானப் பிரசாரத்தை செய்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திமுக, அதிமுக, பாஜக இணைந்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக எல்லா முயற்சியையும் மேற்கொண்டார்கள். இதற்காக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியிடமும் பேசினார்கள்.

ஆனால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, மதசார்பற்ற, சமூக நீதி கொள்கையைக் காப்பாற்ற அதனை ஏற்காமல் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் , தவெகவுக்கு தங்கள் ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.

மக்கள் தீர்ப்புக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக இணைந்து ஆட்சி அமைக்க முற்பட்டதாக கம்யூனிஸ்ட் தலைவர் பேபியும் தெரிவித்த கருத்துக்கு இதுவரை மு.க.ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. ஆனால் கூட்டணி கட்சிகள் எல்லாம் இது தொடர்பாக தங்களை அழைத்துப் பேசியதாக தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு எனக் கூறிய மு.க.ஸ்டாலின், மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், எப்படி இதுபோல் கூறியிருக்கலாம்.

சந்தர்ப்பவாத அரசியலை உருவாக்கியது, தவெக தலைவர் முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது என சதித்திட்டம் போட்டது திமுக.
அந்த சதிச்செயலை முறியடித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்தோம்.
ஜனநாயகத்தில் எல்லோருக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.
ஒளிவு மறைவு அரசியல் எங்களுக்கு இல்லை.

அதிமுக எம்.எல்.ஏக்கள், சட்டத்தின்படி சபாநாயகரை சந்தித்து, மக்கள் முன்னிலையில் நேர்மையாக தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

அதன்பின்னர் என்னை வந்து சந்தித்தார்கள். முதலமைச்சரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்கள். ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்த பின்னர், தொடர்ந்து பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்குச் சென்று பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் முறைப்படி தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டு உறுப்பினர் அட்டை பெற்றுள்ளார்கள். இங்கு ஜனநாயகம் எங்கும் மீறப்படவில்லை.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தோல்விக்கு அவரது மருமகன் சபரீசனும் மகன் உதயநிதியும்தான் காரணம். அவர்கள்தான் 33 இலாகாக்களையும் இரண்டாகப் பிரித்து எல்லாத் துறைகளிலும் ஊழலை உருவாக்கி ஒட்டுமொத்தமாக பணத்தை எல்லாம் கலெக்‌ஷன் செய்து தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் செலவிட்டார்கள்.

ஆனால் மாற்றத்தை விரும்பிய மக்கள், சாதியை, மதத்தை, பணத்தை தோற்கடித்து தவெகவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எல்லாம் திமுகவில் சேர்ந்தது போல்தான், அதிமுக எம்.எல்.ஏக்களும் தவெகவில் சேர்ந்துள்ளார்கள்.

அதிமுகவில் பொதுச் செயலாளர் மீதுதான் எங்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவின் தொண்டர்களை நாங்கள் எப்போதும் வரவேற்போம்.

தேர்தலில் திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அதிமுக தொண்டர்கள் தவெகவுக்காக வேலை பார்த்திருக்கிறார்கள். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் எங்களுக்காக வேலை பார்த்ததால்தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

தலைமைச் செயலகத்தில் அமைச்சரை யார்வேண்டுமானாலும் சந்திக்கலாம். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் சந்தித்தால், அது தவெக அலுவலகம் எனக் கூறுவதா?

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version