காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும், மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப்பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர்மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட, பாஜகவாலேயே புறக்கணிக்கப்பட்ட மாஜி அண்ணாமலை, இன்று எங்கள் தலைவரைப்பற்றி, ஒரு ராஜ்யசபா சீட்டிற்காக தன் ஆன்மாவை விற்றுவிட்டவர் என்று கூறியுள்ளார்.

ஆட்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கும் பழக்கமுள்ள பாஜகவும், அந்தக்கட்சியால் காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை.

உலகம் புகழும் மாபெரும் கலைஞர், இந்திய அரசின் வருமானத் துறையாலேயே நேர்மையாளர் பட்டம் பெற்றவர், 7 ஆண்டுகள் மய்யம் என்ற புதிய சித்தாந்ததோடு கட்சி நடத்தி வருபவர், பல்துறை வித்தகர் எங்கள் தலைவர்.

அவர் ஏற்றுக்கொண்டதால் அந்த எம்.பி., பதவிதான் கவுரவம் பெற்றதேயோழிய அவர் தகுதிக்கு இந்தப்பதவி சாதாரணம். மக்கள் பிரச்சினைகளை உரிய இடத்தில் பேச ஒரு வாய்ப்பாக எம்.பி., பதவியை எங்கள் தலைவர் பார்க்கிறாரே தவிர அதை தனக்கான கிரீடமாக பார்க்கவில்லை.

அவர் எந்தவொரு பதவியில் இல்லாவிட்டாலும், அவர் குரலை இந்தியா திரும்பிப் பார்க்கும் உங்கள் தலைவர்கள் உட்பட. ஆனால் உம்முடைய குரல் வெறும் ஊடகத் தீனிதான் என்பதை நீர் உணரவேண்டும் அண்ணாமலை அவர்களே.

நடந்த சோக நிகழ்வுக்கு யார் பொறுப்பு என்று ஊடகம் கேட்கும்போது, நாம் எல்லோரும்தான் பொறுப்பு என்று கூறியவர் எங்கள் தலைவர். அவரின் நடுநிலையான பேச்சு உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது” என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version