கரூர் துயரம் தொடர்பாக விஜயிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது என தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரின் வேலுச்சாமிபுரத்தில் விஜய் நடத்திய பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் விசாரணையும், சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தவெக நிர்வாகிகள் நிர்மல்குமார், எஸ்.பி.ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து டெல்லியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ்ர் அர்ஜூனா, நிர்மல்குமார் உள்ளிட்டோரை வரவழைத்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக விஜயும் விசாரணைக்கு ஆஜராக கடந்த 6ம் தேதி சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படிப்படையில் நேற்று காலை 11.30 மணியளவில் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. மாலை 6.15 மணியளவில் சிபிஐ அலுவகத்தை விட்டு விஜய் வெளியே வந்தார். அடுத்தநாளும் விஜயிடம் விசாராணை இருக்கும் என கூறப்பட்டது.
ஆனால், பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய் வேறொரு நாள் விசாரணைக்கு வருவதாக கேட்டுக்கொண்டார் என கூறப்பட்டது. அதன்படி இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் விஜய். இந்த நிலையில் சிபிஐ அலுவகத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார்.
அதில், கரூர் சம்பவத்தில் என்ன நடைபெற்றது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். தேவைபட்டால் விஜய் மீண்டும் அடுத்த வாரம் ஆஜராவார். சிபிஐ முன் தேவைப்பட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை போலீசார் மிரட்டி வருகின்றனர். விசாரணையில் நடந்தது வெளியே செல்வது சரியாக இருக்காது” என்றார்.
