கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் பளுதூக்குதல் வீரர்களின் சிறப்பான ஆட்டம் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில், தமிழ்நாட்டின் கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பளுதூக்குதலில் இருந்து நேற்று மட்டுமே இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில், ராஜா முத்துப்பாண்டியின் இந்த வெற்றியும் இணைந்தது. 26 வயதான இவர், ஸ்நாட்ச் பிரிவில் 126 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் தூக்கி, ஒட்டுமொத்தமாக 286 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
மலேசியாவைச் சேர்ந்த அஸ்னில் பின் பிடின் முகம்மது, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சாதனையுடன் (299 கிலோ) தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். கோல்டு கோஸ்ட் 2018 மற்றும் பர்மிங்காம் 2022-க்குப் பிறகு, அவர் வெல்லும் மூன்றாவது தொடர்ச்சியான தங்கப் பதக்கம் இதுவாகும்.
ராஜா முத்துப்பாண்டியின் இந்த வெள்ளிப் பதக்க வெற்றி, அவரது கடினமான போராட்டங்களுக்குக் கிடைத்த பரிசாக அமைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீவிர முழங்கை தசைநார் காயம் காரணமாக, அவர் நீண்ட காலம் விளையாட்டிலிருந்து விலகியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மேலும், கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உடல் எடைப்பிரிவு மாற்றம் போன்ற சவால்களால், பர்மிங்காம் 2022 காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை.
இருப்பினும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு அவருக்கு ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்தது. கடின உழைப்புக்குப் பிறகு தேசிய அணிக்குத் திரும்பிய அவர், 2025 உலக சாம்பியன்ஷிப்பில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார்.
பளுதூக்குதலில் தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டிகளில், இந்தியாவின் பளுதூக்குதல் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முன்னதாக, ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வென்ற மீராபாய் சானு, பெண்களுக்கான 48 கிலோ பிரிவில் தனது மூன்றாவது தொடர்ச்சியான தங்கப் பதக்கத்தை வென்றார்.
மேலும், ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில் இந்தியாவின் சானம்பம் ரிஷிகந்த சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம், காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு பளுதூக்குதல் துறை எப்போதும் ஒரு வலிமையான தூணாக விளங்குவது மீண்டும் உறுதியாகியுள்ளது.
குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு முதல் பின்னடைவு:
பளுதூக்குதலில் வெற்றிகள் குவிந்தாலும், குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு முதல் ஏமாற்றம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான குத்துச்சண்டை ப்ரீ-காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் ஆதித்யா பிரதாப் யாதவ், உகாண்டாவின் நூஹு பாட்டையை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், 3-2 என்ற கணக்கில் உகாண்டா வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஆதித்யா பிரதாப் யாதவ் தொடரிலிருந்து வெளியேறினார்.
