சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை வரும் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force – SSF) என்ற பெயரில் புதிய சிறப்பு போலீஸ் அணி உருவாக்கப்பட்டு, ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப் படை மூலம் பொது இடங்களில் பெண்கள் பயமின்றி நடமாடும் சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.

முதலமைச்சர் பொறுப்பேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு இந்தப் படையை அமைக்கப் போவதாக விஜய் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெகு விரைவில் நடைமுறைக்கு வந்தது. படையின் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (IG) பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரே ‘சிங்கப்பெண்’ என்ற பெயரைப் பரிந்துரை செய்ததாகவும், முதலமைச்சர் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சிறப்பு அதிரடிப்படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இரண்டு துணை சூப்பிரண்டுகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், சந்தைப் பகுதிகள், பொது இடங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தொடர்ச்சியான ரோந்துப் பணி, கண்காணிப்பு மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை இந்தப் படை ஏற்கும்.

பெண்களுக்கு எதிரான தொல்லை, அச்சுறுத்தல், ஈவ் டீசிங் போன்ற சம்பவங்கள் தொடர்பான புகார்கள் வந்தவுடன் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க இந்த அணி தயாராக உள்ளது. முதல் கட்டமாக சேலம் மாநகரில் இந்தப் படை தனது பணியைத் தொடங்கியுள்ளது. மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரியின் முன்னிலையில் கடந்த 14-ம் தேதி இயங்கத் தொடங்கியது. நான்கு சக்கர வாகனங்கள், பாடி வான் கேமராக்கள், அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் படைக்கு வழங்கப்பட்டுள்ளன. தனித்துவமான லோகோ மற்றும் பிரத்யேக சீருடை தயாராகி வருகிறது.

இந்நிலையில் வருகிற 27-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இந்தப் படையின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படையை தொடங்கி வைக்கிறார். டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 30 ரோந்து வாகனங்கள் தயாராக உள்ளன.

தமிழகம் முழுவதும் படிப்படியாக இந்தப் படையின் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் இந்த சிறப்பு படை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு சூழலை கணிசமாக மேம்படுத்தும் என்று பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version