தமிழக தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைந்தால் தான் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும் என தொடர்ந்து செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். ஆனாலும், அவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்துவருகிறார்.
இந்த சூழ்நிலையில்தான் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்குமண்டலத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். விஜய்யை முதல்வராக்கியே தீருவேன் என்று சூளுரைத்து வரும் செங்கோட்டையன், கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக மாநாட்டை ஈரோட்டில் பிரமாண்டமாக நடத்தினார்.
இதையடுத்து, அடுத்த பிளானாக, சேலம், தருமபுரியில் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், கொங்கு மண்டலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், தவெக சின்னத்தை அறிமுகப்படுத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். ஏற்கனவே, மோதிரம், விசில், வெற்றிக்கோப்பை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்தல் ஆணையம் தவெகவிற்கு ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சேலம் அல்லது தருமபுரியில் மக்கள் சந்திப்பை நடத்தி சின்னத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
