தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, டெல்லி தலைமைக்கு அடுக்கடுக்கான புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரான செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரிக்கு அடுத்ததாக அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய அவர், புதிய பாரதம், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் இதற்கு முன்பு இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவருக்கு, மாநில பட்டியலினப் பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்தநிலையில், செல்வப் பெருந்தகையின் செயல்பாடுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சிலர் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவரது தலைமையின் கீழ் கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், கட்சியில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துவதாகவும், தனது நலன் சார்ந்தே முடிவுகளை எடுப்பதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் இவர் மாற்றப்பட வேண்டும் எனவும் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version