திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகளை சேமிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை பகுதியில், சிப்காட் தொழிற்சாலையில் இருந்து சேகரிக்கப்படும் பழைய பொருட்களை தனி நபர் ஒருவர் மறுசுழற்சி செய்வதற்காக கொட்டி வைத்து சேமித்து வைத்துள்லார்.
இந்த பழையப் பொருட்களில் இன்று திடீரென தீப்பற்றியுள்ளது. மளமளவென நெருப்பு பரவியதால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

ஆயினும், தீ கொழுந்து விட்டு எரிந்ததால், கூடுதலாக கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, ரசாயன நுரை பீய்ச்சி அடிக்கப்பட்டது.
பழைய பொருட்களுடன் இருந்த ஆயில் கேன்களும் தீப்பற்றி எரிவதால் கரும்புகை எழுந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
