செங்குன்றம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது பிரசார வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை நெருங்கி புகைப்படம் எடுக்க முயன்ற அந்த ஆட்டோ ஓட்டுநர் எதிர்பாராதவிதமாக வாகனத்தின் முன் தவறி விழுந்தார். இந்த விபத்தில் அவரது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த ஆட்டோ ஓட்டுநர், நடிகர் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓட்டுநர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர். என் குடும்பமே என் வருமானத்தை நம்பித்தான் இருக்கிறது. இப்போது கால் முறிந்த நிலையில் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.”
“உங்களைப் பார்க்க வந்த இடத்தில் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் மருத்துவச் செலவுகள் மிக அதிகமாக இருப்பதால், அதை ஏற்க நீங்கள் முன்வர வேண்டும். என் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு உதவுங்கள்” என அவர் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “தளபதி விஜய் அந்தத் தொண்டரின் மருத்துவச் செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்வார்” என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
